எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

திமுகவும், ஸ்டாலினும் மன்னிப்புக் கேட்க வேண்டும்: எல். முருகன்

திமுகவும், மு.க. ஸ்டாலினும் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :29 மார்ச் 2021, 2:59 pm

DIN

திமுகவும், மு.க. ஸ்டாலினும் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் எல். முருகன் திங்கள்கிழமை தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 13 சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தமிழகம் வருகிறார். இதற்கான பொதுக்கூட்ட மேடையை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன், எல். முருகன் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, பாஜக மாநிலத் தலைவரும், தாராபுரம் தொகுதி பாஜக வேட்பாளருமான எல். முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"தாராபுரத்தில் பிரதமர் மோடியின் வருகை தொடர்பாக பாஜக நிர்வாகிகள் கடந்த ஒருவாரமாக தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். இதில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம், அவிநாசி, காங்கயம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, உடுமலை, மடத்துக்குளம், பல்லடம் ஆகிய 8 சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர்களையும், கோவை தெற்கு, அரவக்குறிச்சி, தொண்டாமுத்தூர், பொள்ளாச்சி, மொடக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர்களையும் ஆதரித்து ஒரே மேடையில் பிரதமர் மோடி பேசுகிறார்.

திருப்பூர் மாவட்டமே பிரதமரின் வருகையை எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறது. சுதந்திரத்துக்கு பின்னர் எந்த ஒரு பிரதமரும் தாராபுரம் வந்தது கிடையாது. திருப்பூர் மாவட்ட மக்களைச் சந்திக்க முதல்முறையாக பிரதமர் மோடி வருகை தரவுள்ளார்.

இந்த தேர்தல் பிரசாரம் தமிழகத்தில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும். தாராபுரம் நகரமே பிரதமரின் வருகையை ஒட்டி விழாக் கோலம் பூண்டுள்ளது. தமிழக முதல்வர் சாதாரணமான விவசாயக் குடும்பத்தில் பிறந்து எளிமையானவராக உள்ளார். திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா முதல்வரின் தாய்மையைக் கொச்சைப்படுத்திப் பேசியது மிகவும் கண்டனத்துக்குரியது. 

ஆ.ராசா மீது திமுக தலைவர் ஸ்டாலின் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் நடவடிக்கை எடுக்கவும் மாட்டார். ஏனெனில் அவரைப் பின்னால் இருந்து பேசச் சொல்வதே ஸ்டாலின்தான். தாய்மையைக் கொச்சைப்படுத்திய திமுகவும், ஸ்டாலினும் தமிழக மக்களிடத்தில் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.