புதுச்சேரி: புதுச்சேரியில் கனமழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதல்வர் என்.ரங்கசாமி.
புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை அக்.26 ஆம் தேதி முதல் தொடங்கி பெய்து வருகிறது. இதில் மழை வெள்ள நீர் தேங்கி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளும் சேதமடைந்துள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்டதற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிக்க | திருப்பூர்: தண்ணீருக்கு அதிகாரிகளிடம் பிச்சை கேட்கும் விவசாயிகள்
இந்நிலையில், வெள்ளிக்கிழமை புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் என். ரங்கசாமி நிவாரண உதவியை அறிவித்தார்.
அதாவது மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ.25 ஆயிரம், பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ. 20 ஆயிரம் வழங்கப்படும். மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம், உயிரிழந்த ஆடுகளுக்கு ரூ.5 ஆயிரம், மாடுகளுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.
சேதமடைந்த அனைத்து விவசாயிகளும் வரும் மழைக் காலத்துக்கு பின் உடனடியாக 100 சதவிகிதம் சீரமைக்கப்படும்.
விரைவில் சாலைகள் மேம்பாட்டு பணி:
விரைவில் சாலைகள் மேம்பாட்டு பணிகள் நடைபெறும். அதற்கான டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை நானும் பார்வையிட்டு உள்ளேன். தொடர்ந்து அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், அதிகாரிகளும் பார்வையிட்டுள்ளனர்.
பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு தொடர்ந்த அனைத்து தரப்பினருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் என்.ரங்கசாமி கூறினார்.
முதல்வருடன் சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வம், அனைத்து துறை உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.