நடமாடும் மருத்துவ வாகனங்கள்: மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு தொடக்கி வைத்தனர்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் இன்று (13.11.2021) நடமாடும் மருத்துவ வாகனங்களை கொடியசைத்து தொட
நடமாடும் மருத்துவ வாகனங்கள்: மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு தொடக்கி வைத்தனர்
நடமாடும் மருத்துவ வாகனங்கள்: மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு தொடக்கி வைத்தனர்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் இன்று (13.11.2021) நடமாடும் மருத்துவ வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

மழைக்காலங்களில் பொதுமக்களுக்கு தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 5,000 மருத்துவ முகாமினை தொடங்கி வைக்கும் விதமாக, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு ஆகியோர் இன்று (13.11.2021) ரிப்பன் மாளிகை வளாகத்திலிருந்து நடமாடும் மருத்துவ வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது,

மழைக்காலங்களில் நோய் தொற்று பரவாமல் தடுக்க மாநிலம் முழுவதும் 5,000 மருத்துவ முகாம்கள் இன்று (13.11.2021) காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1500 நடமாடும் மருத்துவ முகாம்களும் அடங்கும். பெருநகர சென்னை மாநகராட்சியில் 400 முகாம்கள் நாள்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

மேலும், சென்னை மாநகரில் இன்று நடமாடும் மருத்துவ முகாம்களுடன் சேர்ந்து 750 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன. மாநிலத்தில் கடந்த 4 நாட்களில் 38,704 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு 3,54,547 நபர்கள் பயனடைந்துள்ளனர். இந்த முகாம்களில் இதுவரை 43,578 நபர்களுக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்த முகாம்களிலேயே கோவிட் தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் இதுபோன்ற அதிகப்பட்சமான மருத்துவ முகாம்கள் தற்பொழுது தான் நடத்தப்படுகிறது. இந்த முகாம்களில் காய்ச்சல், சளி, இருமல், வயிற்றுப்போக்கு மற்றும் சேற்றுப்புண் ஆகியவற்றிற்கு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

குடிசைப்பகுதிகளில் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் பிளீச்சிங் பவுடர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அரை கிலோ வீதம் வழங்கப்பட உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியில் சுமார் 4,16,000 குளோரின் மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன. தமிழ்நாட்டில் ரூ.167 கோடி அளவிலான மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் உள்ளன.

கோவிட் தொற்று தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாளை (14.11.2021) 8வது மெகா தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெற உள்ளன. இதுவரை சுமார் 75 இலட்சம் நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ளனர். தமிழகத்தில் 71 இலட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. சென்னையில் நாளை 2,000 இடங்களில் கோவிட் மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 72 சதவீத மக்கள் முதல் தவணை தடுப்பூசியும், 33 சதவீத மக்கள் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, நவம்பர் மாத இறுதிக்குள் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திய மாநிலம் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

நாளை நடைபெறும் தடுப்பூசி முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்கனவே வீடு தேடி கோவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 3 இலட்சம் நபர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 7 இலட்சம் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பொதுசுகாதாரத்துறையின் சார்பில் பல்வேறு விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்றைய தேதியில் 493 நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 4,052 நபர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி கொசுப்புழுக்கள் வளர்வதை தடுக்கும் வகையில் புகைப்பரப்பும் இயந்திரங்கள் மற்றும் கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பான்கள் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
அபேட் மற்றும் பைரித்ரம் போன்ற கொசு ஒழிப்பு மருந்துகள் 1.50 இலட்சம் லிட்டர் கையிருப்பில் உள்ளது. கேரளத்தில் புதிதாக பரவியுள்ள நோவோ வைரஸ் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க எல்லைகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதற்கு தேவையான மருந்துகளும் கையிருப்பில் உள்ளது என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் இ.பரந்தாமன், அரசு தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன்,  அரசு முதன்மைச் செயலாளர்/பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com