சென்னையில் திடக்கழிவுகளை 3 நாளில் அகற்ற உத்தரவு
சென்னை மாநகராட்சியில் தேங்கியுள்ள திடக்கழிவுகளை 3 நாளில் அகற்ற ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.


சென்னை மாநகராட்சியில் தேங்கியுள்ள திடக்கழிவுகளை 3 நாளில் அகற்ற ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், திடக்கழிவுகள் அகற்றுதல்: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் சராசரியாக 5000 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டு மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக வகைபடுத்தப்படுகின்றன. இதில் மக்கும் குப்பைகள் இயற்கை உரமாகவும், பிளாஸ்டிக், ரப்பர் போன்ற குறிப்பிட்ட அளவு மக்காத குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ள குப்பைகள் கொடுங்கையூர் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
வடகிழக்கு பருவமழையின் காரணமாக தற்பொழுது சென்னையில் பெய்த கனமழையால் மாநகரின் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி அவை நீர்இறைக்கும் பம்புகளால் வெளியேற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்த மழையின் காரணமாகவும், மழைநீரில் அடித்துவரப்பட்ட பொருட்களின் தேக்கத்தின் காரணமாகவும், மாநகரின் சாலைகள் மற்றும் தெருக்களில் திடக்கழிவுகள் தேங்கியுள்ளன.
மாநகராட்சி பணியாளர்களால் இந்த திடக்கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன. மழைநீர் வெளியேறிபின் தீவிர தூய்மை பணியின் மூலம் கழிவுகள் துரிதமாக அகற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக 13.11.2021 அன்று 5600 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
பிற நகராட்சிகளிலிருந்து 500 தூய்மை பணியாளர்கள்: மாநகராட்சியின் சார்பில் தூய்மை பணி மேற்கொள்ளப்படும் தண்டையார்பேட்டை, இராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர் மற்றும் அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் தீவிர தூய்மைபணியை மேற்கொள்ள பிற நகராட்சிகளிலிருந்து 500 தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளனர். மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் அடுத்த மூன்று நாட்களுக்குள் தீவிர தூய்மைபணி மேற்கொண்டு சாலை மற்றும் தெருக்களில் உள்ள திடக்கழிவுகள் மற்றும் சகதியினை அகற்ற ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
பூங்காக்கள் : மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் பொதுஇடங்களில் தேங்கியுள்ள மழைநீரினை முழுவதுமாக அகற்றவும், மரக்கிளைகள் மற்றும் தோட்டக்கழிவுகளை அகற்றவும் பூங்கா துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீரின் குளோரின் அளவு பரிசோதனை: மழைக்கால நோய்களிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க மாநகராட்சியின் சார்பில் சுகாதார பணிகள், மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பொதுமக்கள் பருகும் குடிநீரில் சரியான அளவு குளோரின் இருப்பதை உறுதி செய்ய அனைத்து வார்டுகளிலும் சுகாதார ஆய்வாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. குளோரின் குறைவாக உள்ள பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் இதுவரை 20,000 குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், மழையால் அதிகம் பாதிப்பிற்குள்ளான தாழ்வான பகுதிகள் மற்றும் கழிவுநீர் வெளியேறிய பகுதிகளில் சுகாதாரத்தை பேணிகாக்கும் வகையில் ஒரு குடும்பத்திற்கு 500 கிராம் பிளீச்சிங் பவுடர் மாநகராட்சியின் சார்பில் வழங்கப்படவுள்ளது.
தெருவிளக்குகள்: பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 200 வார்டுகளிலும் 2,90,497 தெருவிளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மழைநீர் தேக்கத்தின் காரணமாக பழுதடைந்த தெருவிளக்குகள் சரிசெய்யும்பணி மாநகராட்சியின் மின்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழையின் காரணமாக பழுதடைந்த அனைத்து தெருவிளக்குகளும் நாளைக்குள் (15.11.2021) 100 சதவீதம் சீர்செய்ய அரசு முதன்மை செயாலளர் / பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, இ.ஆ.ப., அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...