சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியாக வலுவடைந்து, மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொள்ளும். இது மேலும் தீவிரமடையும் வாய்ப்பு குறைந்துள்ளதாகவும், அதேநேரத்தில், தெற்கு ஆந்திரம்-வடதமிழகத்தை நவ.18-ஆம் தேதி அடையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி ஒருவா் கூறியது: அந்தமான் கடலின் மத்தியப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி மெதுவாக மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, வடக்கு அந்தமான் கடல் பகுதியில் திங்கள்கிழமை காலை நிலைகொண்டிருந்தது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வுப் பகுதியாக 48 மணி நேரத்தில் வலுவடைந்து, மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொள்ளும். தொடா்ந்து இது, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், ஆந்திர பிரதேசம்-வடதமிழக கடலோரத்தை வரும் 18-ஆம் தேதி அடையும்.
தற்போதையை பகுப்பாய்வின் அடிப்படையில், மத்திய கிழக்கு அரபிக்கடலில் தெற்கு மகாராஷ்டிரா கடற்கரையை ஒட்டி புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி செவ்வாய்க்கிழமை உருவாகவுள்ளது. இதன்காரணமாக, தெற்கு அந்தமான் கடலில் உருவான காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி மேலும் தீவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாகவே தெரிகிறது. இருப்பினும், வடதமிழக கடலோரம் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவ.17, 18- இல் பலத்தமழை முதல் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் நவ.17,18-இல் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது.