வெள்ளக்கோவிலில் மனைவியை கடப்பாரையால் அடித்துக் கொலை செய்த கணவர்

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவிலில் மனைவியை கடப்பாரையால் அடித்து கணவர் கொலை செய்தார். 


வெள்ளக்கோயில்​: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோயிலில் மனைவியை கடப்பாரையால் அடித்து கணவர் கொலை செய்தார்.

வெள்ளக்கோயில் ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பாளையம் கிராமம், நடுப்பாளையத்தைச் சேர்ந்தவர் என்.குருநாதன் (62). இவருடைய மனைவி பூங்கொடி (55). இவர்களுக்குப் பிறந்த வாரிசுகள் சாந்தி, ரேவதி, விநாயகன். இவர்களில் ரேவதி உடல்நிலை சரியில்லாமல் கடந்த 2019 ஆம் ஆண்டு இறந்து விட்டார். 

சாந்திக்குத் திருமணமாகி கணவருடன் தாராபுரத்தில் வசித்து வருகிறார்.
நடுப்பாளையத்தில் தனியாக வசித்து வரும் விநாயகன் (35), வெள்ளக்கோயில் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வரும் அனைவருக்கும் கல்வி இயக்க அலுவலகத்தில் மாற்றுத் திறன் குழந்தைகள் பயிற்றுநராக வேலை செய்து வருகிறார். 

இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து 2 குழந்தைகளுடன் கடந்த மூன்று வருடங்களாக தனது அம்மா வீட்டில் இருந்து வருகிறார்.

குருநாதன் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டில் மேற்கூரை வேய்ந்து கொண்டிருந்த போது தவறி விழுந்து தலையில் அடிபட்டு, அன்றிலிருந்து வேலை எதுவும் செய்ய முடியாமல் வீட்டில் இருந்து வருகிறார். 

பூங்கொடி மோளக்கவுண்டன்வலசு கனிஷ்க் ஸ்பின்னிங் மில்லில் 8 வருடங்களாக துப்புரவு வேலைக்குச் சென்று வந்தார்.

தான் குடியிருக்கும் சொந்த வீடு தொடர்பாக குருநாதன் தனது மனைவி, மகனுடன் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளார். மகனை தன்னுடைய வீட்டுக்கு வரக்கூடாதென கூறி வந்தார். 

இந்நிலையில், புதன்கிழமை இரவு அப்பாவும், அம்மாவும் சண்டை போட்டுக் கொண்டுள்ளதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்த சரவணன் என்பவர் விநாயகனுக்கு செல்லிடப்பேசியில் தெரிவித்தார். அங்கு சென்ற விநாயகன் சமாதானப் படுத்திக் கொண்டிருந்த போது, திடீரென குருநாதன் வீட்டிலிருந்த கடப்பாரையை எடுத்து பூங்கொடியின் பின் மண்டையில் அடித்துள்ளார். 

இதில் மூளை சிதறி, ஏராளமான ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே பூங்கொடி உயிரிழந்தார். குருநாதன் தப்பியோடி விட்டார். 

விநாயகன் கொடுத்த புகாரின் பேரில், வெள்ளக்கோயில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இச்சம்பவம் வெள்ளக்கோயில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com