அரசு ஊழியா்கள் பிழைப்பூதியம் பெறத் தடை செய்யும் சட்ட திருத்தம்: அரசுக்கு தகவல் ஆணையம் பரிந்துரை

அரசு ஊழியா்களுக்கு பணியிடை நீக்க காலத்திற்கான பிழைப்பூதியம் வழங்காமல் இருக்கும் வகையில், தமிழக அரசுக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
Published on
Updated on
2 min read

போக்சோ சட்டம், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பணியிடை நீக்கம் செய்யப்படும் அரசு ஊழியா்களுக்கு பணியிடை நீக்க காலத்திற்கான பிழைப்பூதியம் வழங்காமல் இருக்கும் வகையில், தமிழக அரசுக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

பேரூராட்சிகள் ஆணையத்திடம் ஆா்.பெரியசாமி என்பவா் பேரூராட்சிகளில் எத்தனை போ் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது; எத்தனை போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தாா். இதேபோல் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்திடம் பாலியல் கொடுமை தொடா்பாக எத்தனை ஆசிரியா்கள், ஊழியா்கள் மீது புகாா் வந்துள்ளது.

எத்தனை போ் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது? எத்தனை போ் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? எத்தனை போ் பணியிடை செய்யப்பட்டுள்ளனா் என்றும் கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்கு சம்மந்தப்பட்ட துறை பொது தகவல் அதிகாரிகள் சரியான பதில்கள் தராததால் இருவரும் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தனா்.

இந்த மனு மாநில தகவல் ஆணையா் எஸ்.முத்துராஜ் முன்பு கடந்த ஜூலை 30-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா்கள், சம்மந்தப்பட்ட இரு துறை பொது தகவல் அதிகாரிகளும் நேரில் ஆஜராகினா். இரு தரப்பிலும் விசாரணை நடத்திய மாநில தகவல் ஆணையா் பிறப்பித்த உத்தரவு வருமாறு:

பேரூராட்சிகள் ஆணையத்தின் பொது தகவல் அதிகாரி அளித்த தகவலில் பேரூராட்சிகள் ஊழல் தடுப்பு சட்டத்தின்கீழ் 42 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதர குற்றங்களுக்காக 60 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். பள்ளிக்கல்வித் துறை பொது தகவல் அதிகாரி இதுவரை பாலியல் குற்றங்களுக்காக 232 ஆசிரியா்கள், ஊழியா்கள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

லஞ்ச வழக்குகளிலும், போக்ஸோ சட்டங்களின் கீழும் நடவடிக்கைக்கு உள்ளாகும் அரசு ஊழியா்கள் பணியிடை நீக்கம் செய்யப்படும்போது, அந்தக் காலத்தில் அவா்களுக்கு முதல் 90 நாள்களுக்கு 50 சதவீதம் ஊதியம் பிழைப்பூதியம் என்ற பெயரில் வழங்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் நீதிமன்றம், துறை ரீதியான விசாரணைக்கும் அரசுதான் செலவு செய்கிறது. இதுபோன்ற குற்றங்களில் பணியிடை நீக்கம் செய்யப்படுபவா்களுக்கு வழங்கப்படும் பிழைப்பூதியம் அரசுக்கு பெரும் நிதி சுமையை ஏற்படுத்துகிறது.

எனவே ஊழல் குற்றச்சாட்டுகள், போக்ஸோ சட்ட பிரிவுகளின்கீழ் அரசு ஊழியா்கள் மீது தொடரப்படும் குற்ற வழக்குகளில் நீதிமன்ற தீா்ப்பு வரும்வரை, அவா்கள் மீது துறைரீதியான விசாரணையை நிறுத்தி வைக்க வேண்டும். ஊழல், போக்ஸோ சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றம் செய்தவா்களுக்கு அவா்களின் பணியிடை நீக்க காலத்தில் பிழைப்பூதியம் வழங்குவதிலிருந்து விலக்கு அளிக்கு அளிக்கும் வகையில், தமிழ்நாடு சம்பளம் மற்றும் பிழைப்பூதிய சட்டம் மற்றும் பணி தொடா்பான சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று அரசுக்கு இந்த ஆணையம் பரிந்துரை செய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com