

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலங்களை பயன்பாட்டிற்கு எடுத்துக்கொண்ட அரசு நிர்வாகம் அந்த நிலங்களை மீண்டும் திரும்ப ஒப்படைக்கவும், நிலத்திற்கான வழிகாட்டு மதிப்பீட்டு தொகையை வழங்க மறுப்பதாகவும் தேவஸ்தான நிர்வாக தரப்பில் புகார் கூறப்படுகிறது.
இளையான்குடியில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு பாத்தியப்பட்ட சிவன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கான நந்தவனம் அமைந்திருந்த இடம் காலியாக இருந்ததால் கடந்த 2007 ஆம் ஆண்டு இளையான்குடியில் சட்டப்பேரவை தொகுதி அலுவலகம் இந்த இடத்தில் தேவஸ்தான நிர்வாகத்தின் அனுமதியுடன் அரசு தரப்பில் கட்டப்பட்டது.
இதையும் படிக்க | உதவிப் பேராசிரியரை நியமிக்க பிஎச்.டி கட்டாயமில்லை: யுஜிசி உத்தரவு
மேலும் இளையான்குடி கூட்டுறவு பண்டகசாலைக்கு சொந்தமான மண்ணெண்ணெய் வழங்கும் நிலையமும் கோயில் இடத்தில் அமைக்கப்பட்டது. தற்போது இளையான்குடி தொகுதி ரத்து செய்யப்பட்டு மானாமதுரையுடன் இணைக்கப்பட்டுவிட்டது. அதன்பின்னர் பூட்டியிருந்த இளையான்குடி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்த காவல் நிலையம், சொந்த கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு விட்டதால் தற்போது இளையான்குடி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் பூட்டப்பட்டு கிடக்கிறது.
சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் செயல்படும் இளையான்குடி கூட்டுறவு பண்டகசாலை மண்ணெண்ணை வழங்கும் நிலையம்.
சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள மேற்கண்ட அலுவலகத்திற்கான வழிகாட்டு மதிப்பீட்டுத் தொகை இதுவரை தேவஸ்தான நிர்வாகத்திற்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படவில்லை.
மேலும் இந்த இடம் தற்போது அரசு நிர்வாகத்திற்கு பாத்தியப்பட்டது என தெரிவிக்கப்பட்டு அரசு தரப்பில் கூறப்படுகிறது. மேலும் கூட்டுறவு பண்டகசாலைக்காண மண்ணெண்ணெய் வழங்கும் நிலையம் செயல்பட்டு வரும் இடத்திற்கான வாடகையும் தேவஸ்தான நிர்வாகத்திற்கு வழங்கப்படாமல் இருந்து வருகிறது.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | எஸ்பிஐ வங்கியில் 2056 காலியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு
இந்நிலையில், இளையான்குடியில் பூட்டப்பட்டு கிடக்கும் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை சுகாதாரத்துறையினர் தங்களுக்கு ஒதுக்கித் தருமாறு கேட்டுள்ளனர். எனவே கட்டடத்தை சுகாதாரத்துறை வசம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் ஆலோசித்து வருகிறதாம்.
இதற்கிடையில் சிவகங்கை தேவஸ்தான இடத்தில் கட்டப்பட்டுள்ள இளையான்குடி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். கூட்டுறவு பண்டகசாலை மண்ணெண்ணை நிலையம் செயல்படும் இடத்திற்கான வாடகையை வழங்க வேண்டும் என தேவஸ்தான நிர்வாகம் இளையான்குடி வட்ட வருவாய் நிர்வாகத்தை வலியுறுத்தி வருகிறது.
இளையான்குடி சரக சிவகங்கை தேவஸ்தான கண்காணிப்பாளர் சரவணன் இதுகுறித்து இளையான்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு அளித்து வருகிறார். ஆனால் இதுவரை எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை என புகார் தெரிவிக்கப்படுகிறது. எனவே இளையான்குடியில் சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்திற்கு பாத்தியப்பட்ட இடத்தில் கட்டப்பட்டுள்ள சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தை தேவஸ்தான நிர்வாகத்திடம் ஒப்படைக்கவேண்டும், மண்ணெண்ணை நிலையம் செயல்படும் இடத்திற்கான வாடகையை வழங்க வேண்டுமென சிவகங்கை தேவஸ்தான தரப்பிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில் இப்பிரச்னையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.