தமிழகத்தில் அசைவ பிரியர்கள், மதுப்பிரியர்களுக்காக ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
கரோனா நோய்த் தொற்றை பரவாமல் தடுக்க கரோனா தடுப்பூசிகள் நாடு முழுவதும் போடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கடந்த 5 வாரமாக ஞாயிற்றுக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வருகின்ற வாரம் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவத்துறை அமைச்சர் கூறுகையில்,
தமிழகத்தில் இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமைக்கு பதில் சனிக்கிழமை(அக்.23) மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும். 50 ஆயிரம் முகாம்களில் 6ஆம் கட்டமாக சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெறும்.
அசைவம் எடுத்துக் கொண்டால் தடுப்பூசி செலுத்தக்கூடாது என்ற வதந்தியை மக்கள் நம்புவதால், அசைவம், மது பிரியர்களுக்காக சனிக்கிழமை தடுப்பூசி முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.