மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் உள்ள சிவ தலங்களில் கடந்த புதன்கிழமை இரவு ஐப்பசி மாத பெளர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி தினத்தன்று உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் சிவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்ற அன்னாபிஷேக விழாவை முன்னிட்டு லிங்க வடிவிலான மூலவர் சோமநாதருக்கு பலவகை அபிஷேகங்கள் நடத்தி படிகளில் பச்சரிசி அளந்து அன்னம் சமைத்து அந்த அன்னத்தால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. அதன் பின்னர் சுவாமி மீது சாத்தப்பட்டிருந்த அன்னம் கலையப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து சிவனுக்கு சாத்தப்பட்டிருந்த அன்னம்,மலர்மாலைகள் உள்ளிட்ட அலங்காரப் பொருள்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து வந்து தண்ணீரில் கரைத்தனர்.
திருப்புவனத்தில் உள்ள புஷ்பவனேஸ்வரர் சுவாமி கோயிலிலும் திருப்பாச்சேத்தி சிவன் கோயிலிலும் மானாமதுரை ரயில்வே காலனியில் உள்ள பூரண சக்கர விநாயகர் கோயிலில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் சன்னதியிலும் இளையான்குடி ஒன்றியம் குறிச்சி காசி விஸ்வநாதர் கோயிலிலும் அன்னாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இக் கோயில்களில் மூலவர் சிவலிங்கத்திற்கு அன்னத்தால் அபிஷேகம் நடத்தி சிறப்பு பூஜைகள் தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பாச்சேத்தி அருகே மார நாட்டில் உள்ளே பழமையான சிவன் கோவிலில் மூலவருக்கு பச்சரிசி அன்னம் சமைத்து அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு அர்ச்சனைகள், ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் விழாவில் பங்கேற்று சிவனை வழிபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.