திருப்பூர்: தாராபுரம் அருகே கட்டுமானப் பணியின்போது சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி தொழிலாளி ஒருவர் சம்பவ இடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே சரவணன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தில் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் தாராபுரம் குளத்தூர் புஞ்சைத்தெருவைச் சேர்ந்த என்.ஆறுமுகம்(24), பஜனை மடத்தெருவைச் சேர்ந்த பி.ரங்கராஜ்(53) மற்றும் 2 பெண்கள் உள்பட 4 பேர் ஞாயிற்றுக்கிழமை வேலைசெய்து வந்தனர்.
இந்த நிலையில், கட்டடத்தில் இருந்த தூண் திடீரென சரிந்து விழுந்தது. இதில், ஆறுமுகம், ரங்கராஜ் ஆகிய இருவரும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அப்போது அருகிலிருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்த இருவரையும் மீட்டனர். ஆனால் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ரங்கராஜ் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து தாராபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.