தமிழகத்தில் ஏற்றுமதியை ஊக்குவிக்க மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழுவை அமைத்து வியாழக்கிழமை தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று(செப்.22) நடைபெற்ற ‘ஏற்றுமதியில் ஏற்றம் முன்னணியில் தமிழ்நாடு’ என்ற மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்படும் எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தியில்,
தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் நிதித்துறை, வேளாந்துறை, கால்நடைத்துறை, தொழில்துறை செயலாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர் சங்க பிரதிநிதிகள் இடம்பெறுவார்கள்.
இந்தக் குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி தலைவருக்கு அறிக்கைகளை அளிக்கும். மேலும், குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஏற்றுமதியின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.