சேலம்: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சேலம் வந்த முதல்வர் முக.ஸ்டாலினிடம் பணி நிரந்தரம் செய்யக்கோரி பெரியார் பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
சேலம் மாவட்டத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் ஓமலூர் காமலாபுரம் விமான நிலையத்திற்கு புதன்கிழமை வந்தார். அங்கே அவருக்கு மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ வீரபாண்டி ராஜா உள்ளிட்டோர் வரவேற்பளித்தனர். இதனையடுத்து விமான நிலையத்திலிருந்து வாழப்பாடிக்கு காரில் புறப்பட்டு சென்றார்.
காரில் இருந்தபடியே பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பெரியார் பல்கலைக்கழகம் முன்பு 200க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய பணியாளர்கள் காத்திருந்தனர். அவ்வழியே காரில் வந்த முதல்வரிடம் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி பெரியார் பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்கள் கோரிக்கை மனு வழங்கினர்.
தொகுப்பூதிய பணியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சக்திவேல் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் முதல்வரிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மனுக்களை அளித்த பொதுமக்கள்.
இதேபோன்று பணியிடை நீக்கத்தில் உள்ள தொகுப்பூதிய பணியாளர்கள் இடைநீக்க உத்தரவை ரத்து செய்யக் கோரியும் மனு அளிக்கப்பட்டது. அங்கு காத்திருந்த பொதுமக்களிடமும் முதல்வர் ஸ்டாலின் காரில் இருந்தபடியே மனுக்களை பெற்றுக்கொண்டார்.