சென்னை: அரசுப் பேருந்து 1 கி.மீ. தொலைவுக்கு ஓடினால், போக்குவரத்துத் துறைக்கு ரூ.59 நஷ்டம் ஏற்படுகிறது என்று தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிட்டார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின் போது, வெள்ளை அறிக்கையை வெளியிட்டு அது தொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
இதற்கு முன்பாக, கடந்த 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சராக இருந்த சி.பொன்னையன், நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது, நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டாா். ஆனால், இப்போது பத்திரிகையாளா் சந்திப்பின் வழியே நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.
அப்போது அவர் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை மட்டும் ரூ.2 லட்சம் கோடி கடன் பாக்கி வைத்துள்ளது. அந்த வகையில், தமிழக அரசுப் பேருந்து ஒன்று 1 கி.மீ. தொலைவுக்கு ஒடினால், போக்குவரத்துத் துறைக்கு ரூ.59.15 நஷ்டம் ஏற்படுகிறது.
தமிழகத்தில் மகளிருக்கு இலவசப் பேருந்து பயணத் திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே போக்குவரத்துத் துறை நட்டத்தில்தான் இயங்கி வருகிறது.
போக்குவரத்துத் துறையைப் பொறுத்தவரை 1 ரூபாய் வருமானம் வந்தால் ரூ.2 செலவாகிறது. ரூ.1.50 ஓய்வூதியத்துக்குச் செல்கிறது.
மின்சாத் துறைக்கு மட்டும் ரூ.1.34 லட்சம் கோடி கடன்பாக்கி உள்ளது. ஒரு யூனிட் மின்சாரத்துக்கு தமிழக மின் துறைக்கு ரூ.2.36 இழப்பு ஏற்படுகிறது.
முந்தைய திமுக ஆட்சியில் உபரி வருவாய் என்ற நிலை இருந்தது. ஆனால், அந்த நிலை கடந்த 10 ஆண்டுகளில் மாறி, மிப்பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கரோனாவுக்கு முன்பே தமிழகத்தின் நிதிநிலை சரியத் தொடங்கிவிட்டது.
கடனை திரும்ப செலுத்தும் திறன் குறைந்துவிட்டதால், வட்டி அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.24 லட்சம் கோடியாக உள்ளது. இதனால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் பொது சந்தா கடன் மட்டும் ரூ.2,63, 976 ஆக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.