சென்னை: தமிழகத்தின் நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராஜன் தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிட்டார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின் போது, வெள்ளை அறிக்கையை வெளியிட்டு அது தொடர்பான விளக்கத்தையும் அளித்துள்ளார்.
அப்போது அவர் கூறுகையில், முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளோம். அதிமுக ஆட்சிக் காலத்தில், முதல்வரின் செயலாளர்கள் தெரிவித்த திருத்தங்களும் இடபெற்றுள்ளன. ஆந்தரம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் வெளியிட்ட வெள்ளை அறிக்கைகளும் ஆய்வு செய்யப்பட்டன. 2001ல் பொன்னையன் வெளியிட்ட வெள்ளை அறிக்கையையும் ஆய்வு செய்தோம். அதில் துறை ரீதியாக தகவல் எதுவும் இல்லை. தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வெள்ளை அறிக்கையில் துறை ரீதியாக தகவல்கள் இடம்பெற்றிருக்கும் என்றார்.
இதையும் படிக்கலாமே..'தமிழக அரசு ஒரு நாளைக்கு ரூ.87.31 கோடி வட்டி செலுத்துகிறது'.
இதற்கு முன்பாக, கடந்த 2001-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் நிதியமைச்சராக இருந்த சி.பொன்னையன், நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது, நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டாா். ஆனால், இப்போது பத்திரிகையாளா் சந்திப்பின் வழியே நிதி நிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக் காலத்தில் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகைகள், எந்தெந்த வழிகளில் அவை செலவிடப்பட்டன என்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. 120 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக அது அமைந்துள்ளது.
பேரவையில் புயல் கிளம்பும்: நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கை சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் கடுமையான விவாதங்களைக் கிளப்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதுகுறித்த பல்வேறு விவாதங்களை அதிமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எழுப்பும். திமுக ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைய உள்ள நிலையில், நிதிநிலைமை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் வெள்ளை அறிக்கையை நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டுள்ளார்.