அதிமுகவினர் மீது தொடுக்கப்படும் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் வகையில் 6 பேர் அடங்கி சட்ட ஆலோசனைக் குழுவை அமைத்து கட்சித் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும் பலர் மீது ஆளும் கட்சியினரின் தூண்டுதலால், பழிவாங்கும் எண்ணத்தோடு பொய் வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
கட்சி பணிகளிலும், மக்கள் பணிகளிலும் அல்லும் பகலும் அயராது ஈடுபட்டுவரும் கட்சியைச் சேர்ந்த அனைவருக்கும், அதிமுக என்றென்றும் பாதுகாப்பு அரணாகத் திகழும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுகவினரின் தூண்டுதலால் கட்சியினர் மீது தொடுக்கப்படும் பொய் வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொள்ளும் வகையில் கட்சியின் சார்பில் அதிமுக சட்ட ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- எஸ்.பி. வேலுமணியின் வங்கி கணக்கு முடக்கம்
இக்குழுவில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், தளவாய்சுந்தரம், சி.வி.சண்முகம், மனோஜ் பாண்டியன் , இன்பதுரை பாபு முருகவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். நம் அரசியல் எதிரிகளால் காழ்ப்புணர்ச்சியோடு பொய் வழக்குகளை பதிவு செய்யும்போது, அத்தகையவர்களுக்கு கழக சட்ட ஆலோசனைக்குழு அந்த வழக்குகளுக்கான அனைத்து சட்ட உதவிகளையும் முழுமையாக செய்யும். எனவே கழக உடன்பிறப்புகள் மேற்கண்ட குழுவினரை தொடர்பு கொண்டு உரிய தீர்வு காணுமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.