அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு, அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போடுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று காலை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினர்.
கொடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சயனிடம் கடந்த செவ்வாய்க்கிழமை காவல்துறையினர் மீண்டும் விசாரணை நடத்தினர். இதற்கு அதிமுக கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்கலாமே.. 'நம்பி ஏமாறாதீர்கள்.. இப்படியும் சொல்வார்கள்' காவல்துறை அலர்ட்
இந்த நிலையில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், அதிமுகவினரை பழிவாங்கும் நோக்கில் திமுக அரசு செயல்படுகிறது. சமூகவலைத்தளங்களில் போட்ட பழைய பதிவுகளை வைத்து, அதிமுகவினர் மீது வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.
கடந்த கால ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை கிடப்பில் போட்டு முடக்கி வைத்துள்ளனர். ஊழல், வசூல் செய்தல், பழிவாங்குதல் இதைத்தான் திமுக அரசு செய்து வருகிறது. அனைத்துத் துறைகளிலும் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டது.
கொடநாடு வழக்கு நீதிமன்றத்தில் முடியும் தருவாயில் இருக்கும் நிலையில் பொய் வழக்குப் போடப்பார்க்கிறது. தேர்தல் அறிக்கைக்கும் கொடநாடு வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் திமுக அரசு செயல்படுகிறது. உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் இதுவரை பிடித்தது போலி குற்றவாளிகளாக?
அரசியல் காழ்புணர்ச்சியோடு குறுக்கு வழியில் இந்த வழக்கை திசை திருப்ப திமுகவினர் முயற்சி செய்கின்றனர். கரோனா மூன்றாவது அலையைக் கட்டுப்படுத்துவது பற்றி திமுக அரசு கவலைப்படவில்லை.
கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் முறைகேடு உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்வதாக அளித்த வாக்குறுதி குறித்து பேரவையில் நான் கேள்வி எழுப்பினேன். நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துவிட்டது. நீட் விவகாரத்தில் திமுக பொய்யான வாக்குறுதியை அளித்துள்ளது.
திமுக அரசின் 100 நாள்களில் செய்தது சாதனை அல்ல, சோதனை, வேதனைதான் அதிகம் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.