
நீர்நிலைகள், நீர்வழித் தடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு அபராதம்
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட நீர்நிலைகள் மற்றும் நீர்வழித் தடங்களில் குப்பைகள் கொட்டிய 21 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் துறையின் சார்பில் 48.80 கி.மீ. நீளமுள்ள 30 நீர்வழிக் கால்வாய்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பருவமழை காலத்திற்கு முன்னதாகவே சென்னை மாநகராட்சி சார்பில் இந்த நீர்வழிக் கால்வாய்களில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரைகள், வண்டல்கள் மற்றும் குப்பைகள் ஆகியவை நவீன இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டு, தண்ணீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்கலாமே.. கராத்தே சாகசத்தின்போது விபரீதம்: தீக்காயமடைந்த இளைஞர் இறந்ததால் சோகம்
மேலும், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்படி அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவின் களஆய்வு அறிக்கையில் பெருங்குடி ஏரியிலும், ஏரியை சுற்றிலும் குப்பை மற்றும் கட்டடக் கழிவுகளை போடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், திடக்கழிவு மேலாண்மை விதி 2016ன் கீழ் அபராதம் விதிக்குமாறும் பரிந்துரைத்தது.
அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலர்களால் 18.08.2021 மற்றும் 19.08.2021 அன்று களஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பெருங்குடி ஏரி மற்றும் அதனைச் சுற்றிலும் குப்பை மற்றும் கட்டிடக் கழிவுகளை கொட்டிய 21 நபர்களிடமிருந்து ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, மாநகராட்சிக்கு உள்பட்ட நீர்நிலைகள் மற்றும் நீர்வழித் தடங்களில் பொதுமக்கள் குப்பை மற்றும் கட்டடக் கழிவுகளை கொட்டக் கூடாது. மீறினால் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.