திருச்சி: செப்டம்பர் 1ஆம் தேதி முதல்வர் அறிவித்தபடி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது: தமிழக முதல்வர் அறிவித்தபடி செப்.1ஆம் தேதி, 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர், மாணவிகளுக்காக பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதற்காக, பொது சுகாதாரத்துறை அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடு தேடிவரும் தடுப்பூசி: தொலைபேசி எண் அறிவிப்பு
குறிப்பாக பள்ளிகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கிருமிநாசினி மருந்து தெளித்தல் ஆகியவை கட்டாயமாக்கப்படும். 50 சதவீத மாணவர்கள் சுழற்சி முறையில் பங்கேற்பர். ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் அதிகளவு மாணவர்கள் சேர்ந்துள்ளதால் அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கூடுதலாக உள்ள இடங்களில் இருந்து தேவையான இடங்களுக்கு ஆசிரியர்கள் பணிமாற்றம் செய்யப்படுவர். இதற்காக ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். இதன் தொடர்ச்சியாக புதிய ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக முதல்வர் அறிவுரையின்படி காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும். இதுதொடர்பாக, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது என்றார்.