சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நாளை(திங்கள்கிழமை) முதல் நீட்டிக்கப்படவுள்ளது. அதாவது, காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மேலும், நெரிசல் மிகுந்த நேரங்களில் சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளன.
கரோனா இரண்டாம் அலை தீவிரமாகியதைத் தொடா்ந்து, சென்னை மெட்ரோ ரயில் சேவை கடந்த மே 10-ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது. நோய்த்தொற்று பரவல் குறைந்ததையடுத்து, மெட்ரோ ரயில் சேவை மீண்டும் ஜூன் 21-ஆம் தேதி தொடங்கியது.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் கரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நாளை(திங்கள்கிழமை) முதல் (சனிக்கிழமை) வரை மெட்ரோ ரயில் சேவை காலை 5.30 மணியில் இருந்து இரவு 11 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும். இதர நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
அதேபோல ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு பொது விடுமுறை நாள்களில் மெட்ரோ ரயில்கள் காலை 7 மணி முதல் 10 வரை 10 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க- தமிழகத்தில் ஒரேநாளில் மேலும் 1,630 பேருக்கு கரோனா
கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுப்பதற்காக, மெட்ரோ ரயில் நிலைய வளாகம், மெட்ரோ ரயில்களின் உள்ளே முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும், கிருமிநாசினி மூலமாக கைகளை சுத்தமாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனா்.
மெட்ரோ ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில்களில் நுழைவதற்கு அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும். முகக்கவசம் அணியாத பயணிகளுக்கு உடனடி அபராதமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது. ஜூன் 21-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை, முகக்கவசம் அணியாத 176 பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.35,200 வசூலிக்கப்பட்டுள்ளது.