தமிழகத்தில் செப். 1ல் பள்ளிகள் திறப்பு: அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் செப்.1ல், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் செப். 1ல் திறக்கப்படும் பள்ளிகள்
தமிழகத்தில் செப். 1ல் திறக்கப்படும் பள்ளிகள்


தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் செப்.1ல், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டு, பள்ளி மாணவ, மாணவிகளை வரவேற்க பள்ளிகளும் தயாராகி வருகின்றன. 

தமிழகத்தில் சுழற்சி முறையில் பள்ளி மாணவ, மாணவிகளை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளை திறப்பது உள்ளிட்ட முக்கிய வழிமுறைகள் இந்த வாரத்திலேயே பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கல்வித் துறை அதிகாரி கூறியுள்ளார்.

பள்ளிகளில், பின்பற்ற வேண்டிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அனைத்து சுகாதார துணை இயக்குநா்கள் மற்றும் பள்ளிக் கல்வித்துறைக்கு பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வ விநாயகம் கடந்த வாரம் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.

அதில், ஒரு வகுப்பறையில், ஒரே நேரத்தில் 50 சதவீத மாணவா்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்; ஒவ்வொரு மாணவருக்கும் இடையே 6 அடி இடைவெளி அவசியம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையில், பள்ளிகள் காலை, மாலை என இரண்டு நேரங்களாக செயல்பட அனுமதிக்கப்படுமா அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்ப்படுவார்களாக என்ற சந்தேகம், பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கும் எழுந்துள்ளது. இது குறித்த அறிவிப்புக்காகக் காத்திருக்கிறார்கள்.

ஈரோடு மாவட்டம், சர்வோதயா பள்ளி தலைமையாசிரியர் டாக்டர் மணிகண்டன் கூறுகையில், எங்கள் பள்ளியில் சுழற்சி முறையில் காலை - மதியம் என இருநேரங்களில் பள்ளிகள் செயல்பட திட்டமிட்டுள்ளோம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் என்பதை விட, காலை - மதியம் முறை எங்களுக்கு சிறப்பானதாக இருக்கும். காலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், மதியம் 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளை இயக்கலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு நாள் விட்டு ஒரு நாளை விட இந்த முறை நன்றாக இருக்கும் என்று கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சுழற்சி முறையில் பள்ளிகளை இயக்கும் போது, சிறிய பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லாமல், ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் என்ற கருத்தும் எழுந்துள்ளது.

இந்த ஆண்டு பொதுத் தேர்வெழுதும் அல்லது அடுத்த ஆண்டு பொதுத் தேர்வெழுதப் போகும் மாணவர்களுக்கு நேரடியாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்பதில் ஆசிரியர்களும், பெற்றோர்களும் ஒருமித்த கருத்தையே கொண்டுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவரின் தந்தையான மனோஜ் ராமநாதன் இது பற்றி கூறுகையில், பள்ளிகள் திறக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம். கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் செயல்படாததால், மாணவர்களின் கற்றல் திறன் குறைந்திருக்கிறது. பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டால்தான் மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும். வகுப்பில் பாடம் நடத்தும் போது கவனிப்பதைப் போல ஆன்லைன் வகுப்புகளை மாணவர்கள் கவனிப்பதில்லை, அதுபோலவே படிப்புக்கு அதிக முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. பள்ளிகள் திறக்கப்பட்டால் நிச்சயம் அந்த நிலை மாறும் என்று நம்புவதாகக் கூறுகிறார்.

தமிழ்நாடு மாணவர்கள், பெற்றோர் நலச் சங்கத்தின் தலைவர் எஸ். அருமைநாதன் கூறுகையில், ஊரக மற்றும் கிராமப்புற பள்ளிகளுக்கான தனி வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிடவில்லை. வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடும்போது, கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து குறித்து ஊரக மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு தனிக்கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளார்.

பள்ளிகள் திறக்கப்பட்டால், பாடங்கள் குறித்து ஆசிரியர்களிடம் நேரடியாக சந்தேகங்களை எழுப்பி விளக்கங்களைப் பெறலாம், பள்ளித் தோழர்களுடன் இணைந்து படிக்கலாம், சக நண்பர்களைப் பார்க்கலாம் என்றும், பள்ளி இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளோ, தங்களது பள்ளி நாள்களை முழுமையாக வாழ்ந்து பார்க்கலாம் என்றும் எதிர்பார்த்துள்ளனர்.

ஆசிரியர்களும், ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி  சோர்வடைந்துள்ள நிலையில், வகுப்பறையில் நேரடியாக மாணவ, மாணவிகளுக்கு பாடங்களை நடத்தி கேள்விகளை கேட்டு, பதில்களைப் பெற ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

கரோனா பேரிடருக்கு இடையே தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமோ என்ற தவிப்பிலிருந்து பெற்றோர், பள்ளிகள் திறக்கப்பட்டு, நல்ல முறையில் பாடங்களைப் படித்து, பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்ட வேண்டுமே என்று பிரார்த்தித்து வருகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com