சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி வருடாந்திர திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் வருடாந்திர திருவிழா 29.08.2021 முதல் 08.09.2021 வரை நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட சில முக்கிய வழிகாட்டுதல்களை கடைபிடிக்க கோரப்படுகிறது;
1) அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பெசன்ட் நகர், சென்னை பெருநகர மாநகராட்சி 13வது மண்டலம், J6 திருவான்மியூர் காவல் நிலைய சரகம், அடையாறு காவல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் வருடாந்திர திருவிழா ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும். 49வது வருடாந்திர திருவிழா இந்த ஆண்டு 29.08.2021 அன்று நடைபெற உள்ளது.
2) பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், பொது நலன் கருதியும் கரோனா பெருந்தொற்று காரணமாக இந்த ஆண்டு பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் அனுமதி இல்லை. ஆகையால், பொதுமக்களும், பக்தர்களும், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு வருகிற 29.08.2021 (கொடியேற்றம்) மற்றும் 07.09.2021 (தேரோட்டம்) போன்ற நிகழ்ச்சிகளுக்கு வருவதை தவிர்க்க கோரப்படுகிறது. பொது மக்களும், பக்தர்களும் மேற்படி இரண்டு நிகழ்வுகளையும் தொலைக்கட்சி மற்றும் நேரடி சமூக வளைதளங்கள் மூலம் காணலாம்.
3) எனவே, பொதுமக்கள் கூட்டங்களை தவிர்க்க, பெசன்ட் நகர் கடற்கரை பகுதிக்கு வாகனத்துடன் வர வேண்டாம் என கோரப்படுகிறது.
இதையும் படிக்க- கேரளத்தில் ஆகஸ்ட் 30 முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் அறிவிப்பு
4) பொதுமக்கள் வருகிற 29.08.2021 மற்றும் 07.09.2021 ஆகிய இரு தினங்களிலும் பெசன்ட் நகர் கடற்கரை பகுதிக்கு வாகனத்துடன் வர வேண்டாம் எனவும் போலீசுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் கோரப்படுகிறது.
5) அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், பெசன்ட் நகரை சுற்றியுள்ள வர்த்தக வளாகங்கள், கடைகள் செயல்பட 28.08.2021 முதல் 08.09.2021 வரை அனுமதி மறுக்கப்படுகிறது.
6) இந்த திருவிழா நாட்களில் பொதுமக்களும், பக்தர்களும் பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரை பகுதிகளுக்கு வர அனுமதி மறுக்கப்படுகிறது.
7) பொதுமக்களும், பக்தர்களும் சென்னை பெருநகர காவல் துறை மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சி ஆகியோர்களது மேற்படி வழிகாட்டுதல்களை பின்பற்றி, இந்த கரோனா பெருந்தொற்றிலிருந்து விடு பட ஒத்துழைப்பு நல்குமாறு கோரப்படுகிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.