திருநெல்வேலி: திருநெல்வேலி வண்ணார்பேட்டை ரவுண்டானா அருகே கட்டுமான தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்ட கட்டுமான தொழிலாளர் நல சங்கம் சார்பில் இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு இச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலர் ஆர். மோகன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.
பெயிண்டர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் வகையில் செயல்படும் தனியார் விளம்பரங்களை தடை செய்ய வேண்டும்; இயற்கை மரணமடையும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும்; கம்பி, சிமெண்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்ற சுமார் 60க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.