எடப்பாடி: சேலம் மாவட்ட மேற்கு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள, காவிரி பாசனப் பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள செங்கரும்புகளை அறுவடை செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி,கூடக்கல்,குப்பனூர்,பில்லு குறிச்சி,நெடுங்குளம், சிலுவம்பாளையம் உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகளில் பயிர் செய்யப்பட்டுள்ள செங் கரும்புகள் நல்ல விளைச்சல் கண்டுள்ள நிலையில் அவற்றை அறுவடை செய்யும் பணியில் அப்பகுதி விவசாயிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கரும்பு விளைச்சலுக்கு ஏற்ற மண் வளம், கூடுதலான நீர் ஆதாரங்களைக் கொண்ட காவிரி பாசன பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர். சாம்பா ரகம், ரஸ்தாளி கரனை, பூங்கரனை உள்ளிட்ட உயர் ரக கரும்புகள் இப்பகுதியில் அதிக அளவு பயிரிடப்பட்டு வருகிறது.
அதிக வெடிப்புகள் இல்லாத இவ்வகை கரும்புகள் கூடுதல் ருசி கொண்டவையாகும். கரும்பு உள்ள செயலுக்கு ஏற்ற தட்பவெப்ப மற்றும் மண்வளம் அமைந்துள்ள நிலையில் இப்பகுதியில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் செங்கரும்பினை அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர்.
இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் செங்கரும்புகள் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், அண்டை மாவட்ட பகுதிகளான ஈரோடு,பெருந்துறை,திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
அதேபோல் இப்பகுதியில் விளையும் சுவைமிகுந்த கரும்புகளை மொத்த கொள்முதல் செய்யும் வியாபாரிகள் அவற்றினை பெங்களூர், பம்பாய்,புனே உள்ளிட்ட பெரு நகரங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர்.
மேலும் கூட்டுறவுத்துறை மூலம் கொள்முதல் செய்யப்படும் கரும்புகள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்பட்ட உள்ளது. 20 கரும்புகள் கொண்ட ஒரு கட்டு கரும்பை ஆனது ரூ.450 முதல் 600 ரூபாய் வரை விற்பனைசெய்யப்படுகிறது.
நடப்பாண்டில் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக போதிய அளவில் தண்ணீர் திறப்பு இருந்ததாலும், இப்பகுதியில் வடகிழக்கு பருவமழை காலத்தில் நல்ல மழை பொழிவு இருந்த நிலையில் நிகழ் ஆண்டில் காவிரி பாசனப் பகுதிகளில் செங்கரும்பு விளைச்சல் அதிகரித்துள்ளதாக இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.