சென்னை: நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்பது போல, கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தை எடப்பாடி பழனிசாமி மறந்தேவிட்டார் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினாா். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தை திமுக உறுப்பினா் உதயசூரியன் முன்மொழிந்தாா். ஆளும்கட்சி, எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த பல்வேறு உறுப்பினா்கள் தீா்மானத்தின் மீது பேசினா்.
இதையும் படிக்கலாமே.. இது வெறும் டிரெய்லர் தான்: ஆளுநர் உரை குறித்து ஸ்டாலின் பதிலுரை
எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, புதன்கிழமை உரையாற்றினாா். அதற்கு முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோா் குறுக்கிட்டுப் பேசினா். இந்த நிலையில், ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்து உரையாற்றுகிறாா்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாக முன்னாள் முதல்வர் பழனிசாமி குற்றம்சாட்டியதற்கு பதிலளித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், மணியோசை வரும் முன்னே யானை வரும் பின்னே என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். ஆளுநர் உரை மணியோசையும் அல்ல, யானையும் அல்ல.
அதுமட்டுமல்லாமல், அடக்கப்பட்ட யானைக்குத்தான் மணி கட்டுவார்கள். திமுக அடக்க முடியாத யானை.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்பது போல, கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலத்தை பழனிசாமி மறந்தேவிட்டார். தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரிக்க, ஏப்ரல் மாதம் வரை ஆட்சி நடத்திய பழனிசாமியே காரணம். கரோனா தொற்று அதிகரிக்கத்தொடங்கிய போதே, அதனைக் கட்டுப்படுத்த அப்போதைய அதிமுக அரசு தவறிவிட்டது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.
இதையும் படிக்கலாமே.. சென்னையில் நாளை முதல் புறநகர் ரயில் சேவை: தெற்கு ரயில்வே
திமுக ஆட்சிக்கு வந்த போதே, தமிழகத்தில் கரோனா பரவல் உச்சத்தில் இருந்தது. அதன்பிறகு எடுத்த நடவடிக்கைகள் காரணமாகவே கரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று கூறினார்.
சட்டப் பேரவையில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து பதில் அளித்து வருகிறார். இதன்பிறகு, பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும்.