இது வெறும் டிரெய்லர் தான்: ஆளுநர் உரை குறித்து ஸ்டாலின் பதிலுரை

ஆளுநர் உரை ஒரு டிரெய்லர் தான், மீதியை பொறுத்திருந்து பாருங்கள்  என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது வெறும் டிரெய்லர் தான்: ஆளுநர் உரை குறித்து ஸ்டாலின் பதிலுரை
இது வெறும் டிரெய்லர் தான்: ஆளுநர் உரை குறித்து ஸ்டாலின் பதிலுரை


சென்னை: ஆளுநர் உரை ஒரு டிரெய்லர் தான், மீதியை பொறுத்திருந்து பாருங்கள்  என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றினாா். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தை திமுக உறுப்பினா் உதயசூரியன் முன்மொழிந்தாா். ஆளும்கட்சி, எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த பல்வேறு உறுப்பினா்கள் தீா்மானத்தின் மீது பேசினா்.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி, புதன்கிழமை உரையாற்றினாா். அதற்கு முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோா் குறுக்கிட்டுப் பேசினா். இந்த நிலையில், ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது நடந்த விவாதங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்து இன்று உரையாற்றுகிறாா்.

நேற்று நடைபெற்ற விவாதத்தின் போது எதிர்க்கட்சியினர் பேசுகையில், தேர்தலின் போது பல முக்கிய வாக்குறுதிகளை திமுக அளித்துவிட்டு, அது பற்றி ஆளுநரின் உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும், பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்து ஆட்சியைப் பிடித்துவிட்டதாகவும், ஆளுநர் உரை ஏமாற்றமளிப்பதாகவும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியிருந்தனர்.

தமிழக சட்டப்பேரவையில், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்துக்கு பதிலுரை ஆற்றி வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின், திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆளுநர் உரை ஒரு டிரெய்லர்தான், மீதியை பொறுத்திருந்து பாருங்கள். ஆளுநர் உரையில் அரசின் ஓராண்டு கால செயல்திட்டங்கள் மட்டுமே இடம்பெறும். ஐந்தாண்டு காலத்தில் செயல்படுத்தவுள்ள அனைத்தையும் ஆளுநர் உரையில் சொல்லிவிட முடியாது.

எங்களுக்கு வாக்களித்தவர்கள், எங்களுக்கு வாக்களித்ததற்கு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையிலும், எங்களுக்கு வாக்களிக்காதவர்கள், திமுகவுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று வருந்தும் வகையிலும் எங்களது பெணிகள் சிறப்பாக இருக்கும். இன்னும் சிறப்பாக செயல்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல்வராக இருந்த போது கரோனா கட்டுப்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று எடப்பாடி பழனிசாமியின் கைகளை யாரும் கட்டிவைக்கவில்லை. திமுக பதவியேற்ற போது தமிகத்தில் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. கரோனா தொற்று அதிகரித்து, ஆக்ஸிஜன் வசதி இல்லை, தேவையான படுக்கை வசதி இல்லாத நிலையில்தான் திமுக ஆட்சிக்கு வந்தது. திமுக வந்ததும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து இல்லை இல்லை என்ற வார்த்தைகளை இல்லாமல் ஆக்கியுள்ளோம். திமுக பதவியேற்ற பிறகு அரசு எடுத்த போர்க்கால நடவடிக்கைகளால் தற்போது கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com