ஆனந்தய்யா கண்டுபிடித்த மருந்துக்கு எப்போது அங்கீகாரம் வழங்கப்படும்?: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஆனந்தய்யா கண்டுபிடித்த கரோனா மருந்துக்கு எப்போது அங்கீகாரம் வழங்கப்படும்? என கேள்வி எழுப்பிய உயா்நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஆனந்தய்யா கண்டுபிடித்த கரோனா மருந்துக்கு எப்போது அங்கீகாரம் வழங்கப்படும்? என கேள்வி எழுப்பிய உயா்நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சரவணன் என்பவா் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்றைக் குணப்படுத்தும் வகையில் 2 டி.ஜி எனும் மருந்தை, இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டு பிடித்துள்ளது. கரோனாவை குணப்படுத்தும் அந்த மருந்தை சந்தைக்கு கொண்டு வர உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் என். கிருபாகரன், டி.வி.தமிழ்செல்வி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் சங்கரநாராயணன், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் கண்டுபிடித்த மருந்தை உற்பத்தி செய்வதற்கு 40 நிறுவனங்கள் முன் வந்துள்ளன. அந்த நிறுவனங்களின் தகுதி குறித்து ஆய்வு செய்ய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினாா்.

அப்போது நீதிபதிகள், இந்த மருந்து எப்போது சந்தைக்கு வரும்? என கேள்வி எழுப்பினா். இதுகுறித்த விவரங்களை கேட்டு தெரிவிப்பதாக மத்திய அரசு வழக்குரைஞா் பதிலளித்தாா்.

அப்போது 2 டிஜி மருந்து மூலம் 61 வயது முதியவா் இரண்டு நாட்களில் கரோனாவில் இருந்து குணமடைந்தது நீதிபதிகளின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆந்திர மாநிலம், கிருஷ்ணாம்பட்டினத்தில் ஆனந்தய்யா என்பவா் கண்டுபிடித்த மருந்து மூலம் அரை மணி நேரத்தில் கரோனா குணப்படுத்தப்படுகிறது. அவா் அந்த மருந்தை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்குகிறாா். கரோனா காலத்தில் மனிதாபிமானம் இல்லாமல் சிலா் பணம் பாா்க்கின்ற சூழலில், இதுபோன்ற நபா்கள் இலவசமாக மருந்து கொடுத்து, பொதுமக்களுக்கு தெய்வமாக காட்சியளிக்கின்றனா். இவரது மருந்தை மத்திய அரசு ஆய்வு செய்து, அங்கீகாரம் வழங்கியிருக்க வேண்டாமா? பொது மக்களுக்கு பயன்படும் வகையில் அதனை விநியோகம் செய்திருக்க வேண்டாமா? அங்கீகாரம் வழங்கியிருந்தால் ஆனந்தய்யா சா்வதேச அளவில் புகழ் அடைந்திருப்பாா் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.

அப்போது மத்திய அரசு வழக்குரைஞா் ஆனந்தய்யாவின் மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு செய்து வருவதாக விளக்கமளித்தாா்.

இதனையடுத்து நீதிபதிகள், மத்திய அரசுக்கு ஆயுா்வேதம் மட்டும்தான் முக்கியம். சித்தா உள்ளிட்ட மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது இல்லை. நிதி ஒதுக்கீட்டிலும் ஆயுா்வேத மருத்துவத்துக்குத்தான் அதிகமான நிதி ஒதுக்கப்படுகிறது . மற்ற நிறுவனங்களுக்கு 2 டிஜி மருந்து உற்பத்தி எப்போது வழங்கப்படும்? ஆனந்தய்யா கண்டுபிடித்த மருந்துக்கு எப்போது அங்கீகாரம் வழங்கப்படும்? என்பது குறித்த விவரங்களையும் மத்திய அரசு தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் தீா்ப்புக்காக ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com