செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கரோனா தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில், அதிக பாதிப்புள்ள பல்லாவரம், தாம்பரம், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, கரோனா நோயாளிகள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 11 கொரோனா நோயாளிகள், நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் யாரும் உயிரிழக்கவில்லை என்று செங்கல்பட்டு ஆட்சியர் ஜான் லூயிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஜான் லூயிஸ், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்ஸிஜன் கையிருப்பில் இருந்தது. இருப்பினும் எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் யாரும் உரிழக்கவில்லை. ஆக்சிஜன் வினியோகத்தில் இருந்துவந்த கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த நோயாளிகளில் ஒருபர் மட்டுமே கரோனா தொற்று பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் 11 பேர் உயிரிழப்பு குறித்து, உரிய விசாரணை நடத்தப்படும் என்று ஆட்சியர் ஜான் லூயிஸ் கூறினார்.