செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், கரோனா நோயாளிகள் 11 பேர் நள்ளிரவில் அடுத்தடுத்து பலியாயினர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில், கரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. அதிக பாதிப்புள்ள பல்லாவரம், தாம்பரம், காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த, கரோனா நோயாளிகள், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், இங்குள்ள கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 11 கரோனா நோயாளிகள், நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகின்ற நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் குறைவு ஏற்படும் போது ஆக்ஸிஜன் லவலை கூட்டுதற்கோ, மாற்றம் செய்வதற்கோ மருத்துவர்கள் செவிலியர்கள், பணியாளர்கள் என யாரும் இல்லாததால் செவ்வாய்க்கிழமை 5 பேரும், புதன்கிழமை காலையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்
சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். இதன்பின் அவர் கூறுகையில், 'மருத்துவமனையில் போதுமான அளவு ஆக்ஸிஜன் கையிருப்பில் இருந்தது. இருப்பினும் எதிர்பாராத விதமாக உயிரிழப்பு ஏற்பட்டு விட்டது. 11 பேர் உயிரிழப்பு குறித்து, உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.