தமிழகத்தில் பெய்து வரும் கனமழை தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினைத் தொடர்புகொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கிய மழை ஞாயிற்றுக்கிழமை காலை வரை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் மழை நீர் புகுந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது.
முதல்வர் மு.க. ஸ்டாலின் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரில் சென்று பார்வையிட்டார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டன.
பின்னர், சென்னையில் மழை பாதிப்பைக் கண்காணிக்க நியமிக்கப்பட்ட 15 ஐஏஎஸ் அதிகாரிகளுடன் மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலினைத் தொடர்புகொண்டு பேசியதாக பிரதமர் மோடி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் பதிவு:
"தமிழகத்தில் பெய்து வரும் கனமழை தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினேன். மத்திய அரசிடமிருந்து தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. அனைவரது நலம் மற்றும் பாதுகாப்புக்காக பிரார்த்தனை செய்துகொள்கிறேன்."