சென்னை வெள்ளம் மீண்டும் அதிகாரிகளுக்கு பாடம் கற்பித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், 2015 ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளத்திற்கு பிறகு என்ன செய்தீர்கள் என்று சென்னை மாநகராட்சிக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தொடர் கனமழையால் சென்னை பெருநகரத்தில் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு பெருவெள்ளத்தைப் போன்று ஒரு சூழல் நிலவுகிறது. மேலும் சில தினங்களுக்கு கனமழை இருக்கும் என்பதால் மேலும் பாதிப்பு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் சாலைகளை அகலப்படுத்துவது, ஆக்ரமிப்புகளை அகற்றுவது குறித்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பாக இன்று நடைபெற்றது. இந்த வழக்கின் விசாரணையின் இடையே, சென்னை மழை, வெள்ளம் குறித்து நீதிபதிகள் அடுக்கடுக்காக பல கேள்விகளை எழுப்பினர்.
2015 வெள்ளத்திற்குப் பிறகு என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? அதன்பிறகு எடுக்கப்பட்டநடவடிக்கை என்ன? சென்னையில் மழைநீர் தேங்கியது ஏன்? என்று சென்னை மாநகராட்சிக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், 'சென்னை பெருவெள்ளம், மீண்டும் அதிகாரிகளுக்கு பாடம் கற்பித்துள்ளது. ஒரு வாரத்திற்குள் நிலைமை சீராகும் என்று நம்புகிறோம். இனியாவது அதிகாரிகள் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.
இதையும் படிக்க | தமிழகத்தில் 3 நாள்களுக்கு அதிகனமழை தொடரும்: வானிலை மையம்