
தெற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
வடமேற்கு திசையில் நகர்ந்து 11-ஆம் தேதி காலை தமிழக கடற்கரை பகுதியை வந்தடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை - முழு விவரம்
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.
இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது, நாளை (நவ.11) மாலை வடகடலோரப் பகுதியான கடலூர் அருகே காரைக்காலுக்கும், ஸ்ரீஹரிஹோட்டாவுக்கும் இடையே புதுச்சேரிக்கு வடக்கே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது புதுச்சேரிக்கு 420 கிலோ மீட்டர் கிழக்கு, தென்கிழக்கு திசையில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. சென்னையில் இருந்து 430 கிலோமீட்டர் கிழக்கு, தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது கரையைக் கடக்கும்போது புயலாக மாற வாய்ப்பில்லை எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
நாளை (நவ.11) சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும்.
படிக்க | அதி கனமழை எச்சரிக்கை: எவையெல்லாம் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்?
ஓரிரு இடங்களில் அதி கன மழையும், தருமபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
புதுச்சேரி, காரைக்கால், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | கடலூர் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை கரையைக் கடக்கும்

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...