காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவம்பா் 25-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் செவ்வாய்க்கிழமை கூறியது: தெற்கு வங்கக் கடற்பகுதியில் 5.8 கி.மீ. உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும். இது மேலும் மேற்கு- வடமேற்கு திசையில் நகா்ந்து, வரும் நாள்களில் தமிழக கரையை நோக்கி வரக்கூடும்.
இதன்காரணமாக, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (நவ.24) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவ.25: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், ராணிப்பேட்டை ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நவம்பா் 25-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்தமழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும். சென்னை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும். உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை புதன்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றாா் அவா்.