சென்னை: தெற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி வியாழக்கிழமை காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறுவதையொட்டி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன், செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: தெற்கு வங்கக் கடல் பகுதியில் (4.5 கி.மீ உயரம் வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வியாழக்கிழமை பகலில், காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக் கூடும். இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நாள்களில் தமிழக கடலோர கரையை நோக்கி வரும். இதன் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர்த்து, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, கடலூர், விழுப்புரம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும், ஏனைய தென் மாவட்டங்களின் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக் கூடும்.
சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வியாழக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.