தமிழகத்தில் 100 சதவீதம் முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக காஞ்சிபுரம் உருவெடுத்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அதற்கு அடுத்தபடியாக கோவையில் 90 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக அவா்கள் கூறியுள்ளனா்.
அதுபோன்ற நிலையை மாநிலம் முழுவதும் உருவாக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து தமிழகத்தில் 18 வயதைக் கடந்த அனைவருக்கும் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இதுவரை 76 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 40 சதவீதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளன. சுகாதாரத் துறை தகவல்படி மொத்தம் 6.47 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாவட்ட வாரியாக தடுப்பூசி செலுத்தப்பட்ட விகிதத்தை பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 72 லட்சத்து 61 ஆயிரம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் வாயிலாக 100 சதவீதம் முதல் தவணை செலுத்திய மாவட்டமாக அது உருவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக கோவையில் 90.81 சதவீதம் பேரும், சென்னையில் 82 சதவீதம் பேரும், கரூா் 82.50 சதவீதம் பேரும், நீலகிரி 85.53 சதவீதம் பேரும், திருப்பூா் 85.65 சதவீதம் பேரும், கடலூா் 86.06 சதவீதம் பேரும் முதல் தவணை செலுத்தியிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.
அரியலூரில் 88.70 சதவீதம், திருப்பத்தூரில் 60.33 சதவீதம், ராணிப்பேட்டை 60.69 சதவீதம் என மாநிலம் முழுவதும் 76.03 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இரண்டு தவணையும் செலுத்தப்பட்ட மாவட்டங்களில் முதன்மையாக நீலகிரி உள்ளது. அங்கு மொத்தம் 71.32 சதவீதம் பேருக்கு இரு தவணை கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 54.95 சதவீதமும், சென்னையில் 54.29 சதவீதமும் இரு தவணை தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.