சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 25 நாள்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி பாதிக்கபட்டு வருகிறது. அதே போல் பராமரிப்பு இல்லாத வீட்டு மனைகளிலும் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்ப்பதால் அருகில் வசிப்பவர்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
இந்நிலையில், மீண்டும் கடந்த மூன்று நாள்களாக கனமழை பெய்து வருவதால் தற்போது குடியிப்புகளின் சாலைகள் மழைநீரில் மூழ்கி வருகிறது. குறிப்பாக வசந்தம் நகர், பாலசுப்ரமணியன் நகர், கற்பகவிநாயகர் நகர், தட்சிணாமூர்த்தி நகர், மாரிமுத்து நகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட நகர்களில் முறையான வடிகால் வசதிகள் இல்லாததாலும், ஆக்கிரமைப்புகளாலும் மழைநீர் சூழ்ந்துள்ளது.
சீர்காழி நகரில் குடியிருப்புகளை சுற்றி குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்
வீடுகளிலேயே முடங்கியுள்ள இப்பகுதி மக்கள் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து விடுவதால் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசுவதாகவும் இதனால் பல்வேறு நோய்க்கு தொற்றுக்கு ஆளாவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் மழை நீருடன் பாம்பு போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டுக்குள் புகுந்து விடுவதால் அச்சம் அடைந்து வருகின்றனர். இதே கனமழை நீடித்தால் நகரின் பல பகுதிகளில் சாலைகள் மூழ்கி துண்டிக்கபடுவதுடன் வீடுகளில் மழைநீர் உட்புகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
சாலைகளில் வெள்ளம் போல் ஓடும் மழை நீர்.
எனவே நகர் பகுதிகளில் ஆக்கிரமைப்புகளை அகற்றி முறையான வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் போர்கால அடிப்படையில் மழைநீரை அகற்ற வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.