சங்ககிரி: ஆற்றில் மூழ்கியவரை எவ்வாறு காப்பாற்றுவது என்பது குறித்து காவேரிப்பட்டி அக்ரஹாரத்தில் உள்ள பரிசல்துறையில் இயற்கை பேரிடர் மேலாண்மை குறித்து புதன்கிழமை தீயணைப்பு வீரர்கள் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
வடகிழக்கு பருமழை தொடங்குவதையொட்டி, சங்ககிரி வருவாய்த்துறையின் சார்பில் சங்ககிரி வட்டப்பகுதிகளில் உள்ள ஆறுகள், குளம் மற்றும் ஏரிகளில் எதிர்பாரத விதமாக சிக்கிக் கொண்டவர்களை எவ்வாறு காப்பாற்றுவது, மீட்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் காவேரிப்பட்டி அக்ரஹாரத்தில் உள்ள பரிசல் துறையில் சங்ககிரி தீயணைப்பு துறை மூலம் வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு செயல்முறை விளக்கத்துடன் எடுத்துக்கூறப்பட்டன.
தீயணைப்பு நிலைய அலுவலர் டி.அருள்மணி தலைமையில் வீரர்கள் செயல் முறை விளக்கத்துடன் செய்து காண்பித்தனர். இதில் முதலில் தண்ணீரில் சிக்கிக் கொண்டால் தண்ணீரில் மிதந்து வரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் சேமித்து வைக்கும் குவளை, பிளாஸ்டிக் கேன், பிளாஸ்டிக் காலி குடங்கள், கனரக வாகனங்களுக்கு பொருத்தப்படும் டயர்கள் ஆகியவற்றை பிடித்துக்கொள்ள வேண்டும் அதில் தண்ணீர் உட்புகாதவாறு மூடிக்கொள்ளவேண்டும், மூடுவதற்கு அதற்குண்டான மூடி கிடைக்கவில்லை எனில் அருகில் கிடக்கும் நெகிழி பைகளை கட்டியும் மற்றும் மிதக்கும் வாழை மரங்களை பிடித்துக்கொண்டும் சப்தமிட்டால் அவர்களை காப்பாற்ற உதவிகரமாக அமையும்.
மேலும் கனரக வாகனங்களுக்கு பொருத்தப்படும் டயர்கள் கொண்டு எவ்வாறு காப்பாற்றுவது, அதேபோல் தண்ணீரில் முழ்கியவரை கிடைக்கும் கயிறுகளை கொண்டும் எப்படி காப்பாற்றுவது, வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிப்பது பற்றியும் செயல்முறை விளக்கம் அளித்தனர்.
வருவாய் கோட்டாட்சியர் கோ.வேடியப்பன், வட்டாட்சியர் எஸ்.பானுமதி, மண்டல துணை வட்டாட்சியர் ஜெயக்குமார், தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்யராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.