தமிழகத்தில் இரண்டு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தியில்,
வெப்பசலனம் காரணமாக இன்று கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இதையும் படிக்க | சபரிமலை செல்ல அக்.21 வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை
நாளை(அக்.19) தென் மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அக்டோபர் 20 முதல் 22 வரை டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்கள் கவனத்திற்கு
கேரள கடலோரப் பகுதி, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதனால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.