சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள வைகுந்ததில் கணவர் தொடர்ந்து மது அருந்தி வந்ததால் வேதனையடைந்த மனைவி வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மனைவி இறந்ததையறிந்த கணவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சங்ககிரி அருகே உள்ள வைகுந்தம் பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் கார்த்திக் (30). அவரது மனைவி ப்ரியா (27) இருவருக்கும் கடந்த ஒன்றை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. கார்த்தி அவரது லாரியில் ஓட்டுநராகவும் பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. அதனை அவரது மனைவி கண்டித்துள்ளார்.
சம்பவம் நடைபெற்ற வீட்டின் முன்பு குழுமிய அவரது உறவினர்கள்.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை மது அருந்தி வீட்டிற்கு வந்துள்ளார். இதில் மனவேதனையடைந்த அவரது மனைவி பிரியா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த கணவர் கார்த்திக் அவரது கழுத்தை அறுத்துக்கொண்டு அப்பகுதியில் உள்ள ஏரிக்கரையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தம்பதியினர் இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சங்ககிரி போலீஸார் வழக்குப்பதிவு செய்து இருவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
திருமணம் நடைபெற்ற ஒன்றை ஆண்டுகளே ஆகியுள்ளதால் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு போலீஸார் பரிந்துரை செய்துள்ளனர்.