பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பை வரவேற்பதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையின் விதி எண் 110-ன் கீழ் முதல்வர் மு.க. ஸ்டாலின், பெரியார் பிறந்த செப்டம்பர் 17-ஆம் தேதி சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று அறிவித்தார்.
மேலும், பெரியாரின் செயல்கள், போராட்டங்கள் குறித்துப் பேச வேண்டுமென்றால் 10 நாள்கள் அவையை ஒத்திவைத்துவிட்டுப் பேச வேண்டும். இந்தியா முழுவதும் சமூகநீதி பரவ பெரியார் அளித்த அடித்தளமே காரணம்.
அவரது பேச்சுகள், எழுத்துகள் யாரும் பேசத் தயங்கியவை, எழுதத் தயங்கியவை. பெரியாரின் குருகுல பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது.
நாடாளுமன்றத்தின் வாசலுக்கே போகாத பெரியாரால்தான் இந்திய அரசியல் அமைப்பில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்களின் இன்றைய எழுச்சிக்கு பெரியார் போட்ட விதையே காரணம் என்று பேசினார்.
இதையடுத்து, கடவுள் நம்பிக்கை கொண்ட பாஜகவும் பெரியாரின் பிறந்தநாளை சமூக நீதி நாளாகக் கொண்டாடுவதை வரவேற்கிறது என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.