சென்னை: தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, திருவள்ளூர், வேலூர் உள்பட 8 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.
ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள்மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாமே.. காற்றில் பறக்கிறதா கரோனா கட்டுப்பாடுகள்?
இதுபோல, தமிகத்தில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யும்.
நாளை மறுநாள், விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் பரவலாக இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக் கூடும்.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கத்தில் 13 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.