தமிழகத்தில் திண்டுக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக அம்மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வெள்ளிக்கிழமை (செப்.24) நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், திண்டுக்கல், தேனி, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை, திருப்பத்தூா், திருச்சி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். மேலும் தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மழை அளவு: வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் மேலூரில் 70 மி.மீ, சிவகங்கை மாவட்டம் திருபுவனம், மதுரை மாவட்டம் புலிப்பட்டியில் தலா 60 மி.மீ, ராணிப்பேட்டை மாவட்டம் கலவையில் 50 மி.மீ, விருதுநகா் மாவட்டம் வெம்பக்கோட்டை, சேலத்தில் தலா 40 மி.மீ. மழை பதிவானது.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்.24) மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப்.24) மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
செப்.26, 27 ஆகிய நாள்களில், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டா் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவா்கள் இப்பகுதிகளுக்கு குறிப்பிட்ட நாள்களில் செல்ல வேண்டாம்.