கிருஷ்ணகிரி: ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் சிலை உடைப்பு சம்பவத்தால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. எல்லையில் இரு மாநில போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியை அடுத்த ஆந்திரம் மாநில எல்லையில் உள்ளது ஓ.என். கொத்தூர் கிராமம். இங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் நிறுவனருமான ராஜசேகர ரெட்டியின் சிலை உள்ளது.
கொத்தூர் கிராமத்தில் நிறுவப்பட்டிருந்து ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் சிலையை உடைத்து எடுத்துச் சென்ற சிமென்ட் கட்டை.
இந்த நிலையில், அந்த கிராமத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு மின்சாரத்தை துண்டித்த மர்ம நபர்கள், ராஜசேகர ரெட்டியின் சிலை உடைத்து, அங்கிருந்து முற்றிலும் அகற்றினர். வெள்ளிக்கிழமை அதிகாலை சிலை இல்லாததைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த மக்கள், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நிறுவனரின் சிலையை உடைத்த மர்ம நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் தமிழகம் - ஆந்திரம் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆந்திரம் மாநிலத்தைச் சேர்ந்த குடிப்பள்ளி காவல் நிலைய போலீசார், நிகழ்வு இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர்.
ஆந்திரம் மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர் ரெட்டியின் சிலை உடைப்பு சம்பவத்தால் பதட்டம் ஏற்பட்டுள்ளதை அடுத்து ஓ.என். கொத்தூர் கிராமத்தில் தமிழக, ஆந்திரம் மாநிலங்களின் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.