தமிழகத்தில் 2 நாள்களுக்கு கனமழை: எங்கெல்லாம் வாய்ப்பு?
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு கனமழை முதல் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்:
தென்மேற்கு பருவ காற்று காரணமாக இன்று தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழையும், நீலகிரி, கோவை, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும், ஏனைய தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை(செப்.28): நீலகிரி, கோவை, தேனியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை, ஏனைய டெல்டா - தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் கானப்படும்.
மீனவர்களுக்கு...
குமரிக்கடல், மன்னார் வளைக்குடா, தென்மேற்கு வங்க கடல், ஆந்திரம், கேரள கடல், லட்சத்தீவு மற்றும் தென் அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று 55 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.