மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழாவில் கடந்த திங்கள்கிழமை இரவு இரட்டைக் குதிரை வாகனத்தில் ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதர் சுவாமியும் எழுந்தருளி பவனி வருதல் நடைபெற்றது.
இதையும் படிக்க.. கரோனா நோயாளிகள் இல்லாத முதல்நாள்: ராஜீவ் காந்தி மருத்துவமனை சாதனை
மானாமதுரையில் சித்திரைத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஐந்தாவது நாள் மண்டகப்படியாக கால்பிரிவு கிராமத்தார் மண்டகப்படியின் போது கோயிலுக்கு எதிரே அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியில் ஆனந்தவல்லி அம்மன் குதிரை வாகனத்திலும் பிரியாவிடை சமேத சோமநாதர் சுவாமி மற்றொரு குதிரை வாகனத்திலும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர்.
அதைத் தொடர்ந்து கால்பிரிவு கிராமத்தினர் மற்றும் பக்தர்கள் அம்மனையும் சுவாமியையும் தரிசனம் செய்தனர். பூஜைகள், தீபாராதனைகள் நடை பெற்று முடிந்து இரட்டைக் குதிரை வாகனங்களில் ஆனந்தவல்லி அம்மனும் சோமநாதர் சுவாமியும் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் பவனி வந்து கோயிலுக்குள் சென்றடைந்தனர்.
ஐந்தாவது நாள் திருவிழா மண்டகப்படி நடைபெற்ற இரவில் மழை பெய்ததால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது.