

சென்னை: தமிழ்நாட்டில் கட்டடம் கட்ட அனுமதி பெற வேண்டிய மக்கள் வருகின்ற மே 1 முதல் நேரில் வர தேவையில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பெருநகர குழுமம் மற்றும் நகர்ப்புற ஊரக இயக்ககம் மூலம் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி வழங்கப்படுகிறது.
கட்டடங்களுக்கு ஏற்ப பல்வேறு துறைகளில் அனுமதி பெற வேண்டியிருப்பதால் காலதாமதம் ஏற்படுவதோடு மக்களுக்கு அலைச்சல் அதிகம் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து, கட்டடம் கட்டுவதற்கான அனைத்து அனுமதிகளையும் ஒரே நேரத்தில் ஒற்றைச்சாளர முறையில் வழங்கும்படி முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், ஒற்றைச்சாளர முறையில் அதுவும் தானியங்கி முறையில் கட்டட அனுமதியை பெறும் முறை, வரும் மே 1 ஆம் தேதி முதல் அமலாக்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் நகராட்சிகளிலும், அடுத்தகட்டமாக பேரூராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளிலும் ஒற்றைச்சாளர திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதையடுத்து மே 1 ஆம் தேதி முதல் கட்டடங்களுக்கு அனுமதி கோரி விண்ணப்பிப்போர் உரிய ஆவணங்களை இணையதளம் மூலமாக சமர்ப்பித்தால் போதுமானது என்றும் நேரில் வர தேவையில்லை என தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது.
கால தாமதம் மற்றும் அலைச்சலின்றி மக்கள் கட்டடங்களுக்கு அனுமதி பெறும் வகையில் இத்தகைய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.