மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கொட்டித் தீர்த்த மழையால் சாலைகளில் மழைத் தண்ணீர் பெருக்கெடுத்தது. தாழ்வான பகுதிகளில் வீடுகளை மழைத் தண்ணீர் சூழ்ந்தது.
மானாமதுரை பகுதியில் கடந்த சில நாள்களாக வெயில் அடிப்பதும் அவ்வப்போது மழை பெய்வதுமாக காலநிலை மாறி மாறி இருந்து வந்தது.
இந்த நிலையில், கடந்த 5 நாள்களாக மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் வெப்பம் தாங்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். மதியம் நேரங்களில் வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இரவு நேரங்களில் வீடுகளில் மக்கள் தூக்கமின்றி புழுக்கத்தால் அவதிப்பட்டனர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு வானத்தை மழை மேகங்கள் சூழ்ந்து இடி இடிக்கத் தொடங்கியது. அதன்பின்னர் சாரலாக தூறத் தொடங்கிய மழை வலுவடைந்து பலத்த மழையாக மாறி கொட்டி தீர்த்தது. சுமார் ஒரு மணி நேரம் பெய்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து. தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளை மழைத் தண்ணீர் சூழ்ந்து நின்றது.
அதைத் தொடர்ந்து காலை 7 மணிக்கெல்லாம் வழக்கம்போல் கதிரவன் கண்ணைத் திறந்து பார்த்ததும் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. அதிகாலைப் பொழுதில் பெய்த இந்த மழையால் நிலவிய குளிர்ச்சித்தன்மை வெயிலின் கொடுமையை அனுபவித்து வரும் மக்களுக்கு இதமாக இருந்தது.
இதையும் படிக்க | மதுரையில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர் பலி