தஞ்சை தேர் விபத்து: திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி

பலியான 11 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்த 14 பேருக்கு தலா ரூ.25 ஆயிரமும் திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தஞ்சை தேர் விபத்து: திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி
தஞ்சை தேர் விபத்து: திமுக சார்பில் ரூ.2 லட்சம் நிதியுதவி
Published on
Updated on
2 min read


சென்னை: தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால் பலியான 11 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்த 14 பேருக்கு தலா ரூ.25 ஆயிரமும் திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதாவது, தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டதால் 11 பேர் பலியகினர். 14 பேர் காயமடைந்தனர்.

திமுக சார்பில், இம்மின் விபத்தில் இறந்த 11 பேர் குடும்பங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், காயமடைந்த 14 பேர்களுக்கு தலா ரூ.25 ஆயிரமும் என மொத்தம் 25 லட்சத்து 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்த்திருவிழாவில் கோர விபத்து

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் புதன்கிழமை அதிகாலை நடைபெற்ற தேர்த் திருவிழாவில் மின்சாரம் தாக்கியதில்  11 பேர் உயிரிழந்தனர். மேலும் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் 4 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு அப்பர் மடம் அமைக்கப்பட்டது.

இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை மாத சதய நட்சத்திர நாளில் அப்பர் சதய விழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இதன்படி 94 ஆம் ஆண்டாக மூன்று நாள் அப்பர் சதய விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. வெகு விமரிசையாக நடைபெற்று வந்த இத்திருவிழாவில் இரவில் மின் அலங்கார தேர் புறப்பாடு தொடங்கியது. இதில் அப்பர் படம் வைத்து இழுத்து வரப்பட்டது.

தொடர்ந்து களிமேடு கிராமத்திலுள்ள நான்கு வீதிகளிலும் தேர் வலம் வந்தது. வீட்டுக்கு வீடு தேங்காய் பழம்  வைத்து படையல் செய்து வழிபட்டனர்.  புதன்கிழமை அதிகாலை 3.15 மணியளவில் கீழத் தெருவிலிருந்து முதன்மைச் சாலைக்கு வந்த இத்தேர் திருப்பத்தில் திரும்பியபோது, மேலே சுமார் 30 அடி உயரத்தில் உள்ள உயரழுத்த மின் பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியது.

இதனால் தேரை இழுத்து வந்த மக்கள் மீதும், சுற்றி இருந்தவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இவர்களில் களிமேடு கிராமத்தைச் சேர்ந்த எம். மோகன் (22), முன்னாள் ராணுவ வீரர் கே. பிரதாப் (36), ஏ. அன்பழகன் (60), இவரது மகன் ராகவன் (24), நாகராஜ் (60), ஆர். சந்தோஷ் (15), டி. செல்வம் (56), எம். ராஜ்குமார் (14), ஆர். சாமிநாதன் (56), ஏ. கோவிந்தராஜ் ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் பலத்த காயமடைந்த எம். ரவிச்சந்திரன் (48), ஆர். கலியமூர்த்தி (40), கே. ஹரிஷ் ராம்  (10), எம். நித்தீஷ் ராம் (13), ஏ. மாதவன் (22), டி. மோகன் (54), என். விஜய் (23), எம். அரசு (19), ஜி. விக்கி (21), திருஞானம் (36), வி. ஹரிஷ் (11), மதன் மனைவி சுகுந்தா (33), பி. கௌசிக் (13), எஸ். பரணி (13) ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் பரணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com