சென்னை: தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை, ஒகினவா மின்சார கூட்டர் திடீரென தீப்பற்றி எரிந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே, சதீஷ் என்பவர் கடந்த ஆண்டு மின்சார ஸ்கூட்டரை வாங்கியுள்ளார். வழக்கம் போல இன்று காலை தனது மின்சார ஸ்கூட்டரில் சதீஷ் அலுவலகத்துக்குப் புறப்பட்ட போது, அதிலிருந்து லேசான புகை வந்துள்ளது.
வாகன ஓட்டுநரின் இருக்கைக்குக் கீழிருந்து புகை வந்ததால், அவர் உடனடியாக இருக்கையை திறந்து பார்த்துள்ளார். அங்கே, ஸ்கூட்டரின் உள்பாகங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். அதற்குள் ஸ்கூட்டர் முழுவதும் தீ வேகமாகப் பரவி முழுமையாக தீப்பற்றி எரிந்தது.
அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் ஸ்கூட்டரில் பற்றிய தீயை சதீஷ் அணைத்தார். ஆனால் அதற்குள் ஸ்கூட்டர் முற்றிலும் நாசமாகிவிட்டது.
அண்மைக்காலமாக இதுபோன்ற மின்சார ஸ்கூட்டர்கள் திடீரென தீப்பற்றி எரியும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதையடுத்து, ஒகினாவா மற்றும் ஓலா நிறுவனங்கள் தங்களது மின்சார வாகனங்களை திரும்பப் பெற்று வருகின்றன.