கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியை சேர்ந்த, 11 வயது பள்ளி மாணவி, ஒரு நிமிடத்தில் 28 முறை கண்டபேருண்டாசனத்தில் இருந்து சக்கர பந்தாசனத்திற்கு மாறியதன் மூலம் உலக சாதனை படைத்தார். இவரது சாதனை மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தன.
கும்மிடிப்பூண்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் டி.சரவணன்-எஸ்.மலர்விழி தம்பதியர் மகள் டி.எஸ்.ஜோதிஷா(11). இவர் கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்.கே பாடசாலா பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார்.
கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீ சங்கரி யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், ஐந்து ஆண்டுகளாக யோகா பயின்று வருகிறார். இவர், ஒரு நிமிடத்தில் 28 முறை கண்டபேருண்டாசனத்தில் இருந்து சக்கர பந்தாசனத்திற்கு மாறியதன் மூலம் உலக சாதனை படைத்தார்.
இவரது சாதனை, ‛இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்ட்’, ‛வேல்ட் வைட் புக் ஆப் ரெக்கார்ட்’, ‛அசிஸ்ட் உலக சாதனை’, ஆகிய மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தன.
சாதனை படைத்த மாணவி ஜோதிஷா, அவரது யோகா பயிற்சியாளர் சந்தியா ஆகியோரை சக மாணவர்கள், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.